மண் அரிப்பால் மெகா பள்ளம் வாகன ஓட்டிகள் திக்... திக்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 23வது வார்டு, திருவள்ளுவர் தெருவுடன், 24வது வார்டு வி.என்.பெருமாள் தெரு இணையும் இடத்தில் மழைநீர் கால்வாய் உள்ளது. இக்கால்வாயில் சென்ற மழைநீரால், மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளதோடு, சாலையின் அகலமும் குறைந்துள்ளது.அகலம் குறைவான இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், வளைவில் திரும்பும்போது, சாலையோரம் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைகின்றனர். அதேபோல், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் பாதசாரிகளும் பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், திருவள்ளுவர் தெருவில் சேதமடைந்த சாலையை சீரமைக்கவும், மழைநீர் சென்றால் மீண்டும் மீண்டும் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.