| ADDED : டிச 28, 2025 05:44 AM
காஞ்சிபுரம்: ஒழுக்கோல்பட்டு சாலை வளைவில் தடுப்பு அமைக்க வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த, சிறுணை கிராமத்தில் இருந்து, கூரம் கிராமம் வழியாக ஒழுக்கோல்பட்டு கிராம சாலை உள்ளது. இச்சாலை நடுவே, கூரம் ஏரி நீர் வரத்து கால்வாய் சிறுபாலம் செல்கிறது. இந்த சிறுபாலத்தின் வழியாக, ஒழுக்கோல்பட்டு, வதியூர், கீழ்வேண்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் சிறுணை கூட்டுச்சாலை வழியாக பாலுச்செட்டிசத்திரம் பகுதிக்கு சென்று வருகின்றனர். அதேபோல, பாலுச்செட்டிசத்திரம், திருப்புட்குழி சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் சிறுணை, கூரம் ஆகிய கிராமங்களின் வழியாக ஒழுக்கோல்பட்டு நெமிலி, பனப்பாக்கம் உள்ளிட்ட பகுதிக்கு சென்று வருகின்றனர். தற்போது, ஒழுக்கோல்பட்டு சாலை வளைவு சிறுபாலத்தின் ஓரம் இருபுறமும் தடுப்பு இல்லாததால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கால்வாய் பள்ளத்தில் கவிழும் நிலை உள்ளது. எனவே, சிறுணை- - ஒழுக்கோல்பட்டு இடையே, கூரம் ஏரிக்கு செல்லும் நீர் வரத்து கால்வாய் சிறுபால வளைவில், தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.