| ADDED : பிப் 19, 2024 10:59 PM
சென்னை:சென்னையில், 17.47 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஒலிம்பிக் அகாடமியை, அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்.சென்னை வேப்பேரியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில், 17.47 கோடி ரூபாய் செலவில், ஒலிம்பிக் அகாடமிக்காக கட்டப்பட்ட மூன்றடுக்கு கட்டடத்தை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி நேற்று திறந்து வைத்தார். இதன் தரைதளத்தில் பல்நோக்கு விளையாட்டு தளம்; முதல் தளத்தில், டேக்வாண்டோ, ஜுடோ விளையாட்டு தளம்; இரண்டாவது தளத்தில் வாள்வீச்சு தளம்; மூன்றாம் தளத்தில் விளையாட்டு அறிவியல் மையம் போன்றவை செயல்பட உள்ளன.மேலும், விளையாட்டு வீரர்களின் சான்றிதழ்களை டிஜி லாக்கர் இணையத்தில் சேமிக்கும் வசதி உள்ளிட்டவற்றுடன், விளையாட்டு துறைக்கான மேம்படுத்தப்பட்ட 'www.sdat.tn.gov.in' இணையதளத்தையும் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் மேல்கோட்டையூரில் உள்ள உடற்கல்வியியல் பல்கலையில், 5.33 கோடி ரூபாய்க்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள்; 4.70 கோடி ரூபாயில், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மைய கட்டடம்; 2.58 கோடி ரூபாயில் கெனோயிங் மற்றும் கயாக்கிங்கிற்கான முதன்மை நிலை பயிற்சி மையக் கட்டடம் போன்றவையும் திறந்து வைக்கப்பட்டன. பின், உதயநிதி அளித்த பேட்டி:ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கங்களை குவிக்கும் வகையில் பயிற்சிஅளிக்க, சென்னையில் ஒலிம்பிக் அகாடமி திறக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை, திருச்சி, நீலகிரி மாவட்டங்களிலும் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும். நிலம் தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த பொறுப்பை கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.,விடம் ஒப்படைத்துள்ளோம்; விரைவில் பணிகள் துவங்கும். பார்முலா ரேஸ் போட்டியை, விதிகளுக்கு உட்பட்டு பாதுகாப்பு அம்சங்களுடன் நடத்த உள்ளோம். அதற்கு விளம்பரதாரர்களின் வாயிலாக நிதி திரட்ட உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.