நெல் கொள்முதல் நிலையம் அவளூரில் துவக்கம்
வாலாஜாபாத் : வாலாஜாபாத் அடுத்த, அவளூர், கண்ணடியன்குடிசை, நெய்க்குப்பம், மேட்டூர் மற்றும் அங்கம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில், கிணறு மற்றும் பாலாற்று பாசனம் வாயிலாக பல ஏக்கர் பரப்பில் விவசாயிகள் முன்று போகம் நெல் சாகுபடி செய்கின்றனர்.இப்பகுதிகளில் அறுவடையாகும் நெல்லை, அவளூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விற்பனை செய்வது வழக்கம்.நடப்பாண்டு சம்பா பட்டத்திற்கு நடவு செய்த நெற்பயிர்கள் தற்போது அறுவடை பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதனால், அவளூருக்கான நெல் கொள்முதல் நிலையத்தை விரைவாக துவக்க இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.இதுகுறித்தான செய்தி, நம் நாளிதழில், கடந்த 22ம் தேதி வெளியானது. அதன் தொடர்ச்சியாக, அவளூரில் நேற்று, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டது.உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். அப்பகுதி ஏரிநீர் பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.