நிழற்குடையின்றி பஸ் நிறுத்தம் வல்லம் பயணியர் அவதி
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், வல்லக்கோட்டை அருகே உள்ளது வல்லம் பேருந்து நிறுத்தம். இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி, தாம்பரம் - ஸ்ரீபெரும்புதுார், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வழித்தடத்தின் வழியே செல்லும், ஏராளமானவர்கள் பேருந்தில் நாள்தோறும் பயணம் செய்கின்றனர்.தவிர, வல்லம் சிப்காட் பகுதிகளில் இயங்கிவரும் 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கு, பணிக்கு செல்லும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி சென்று வருகின்றனர். இந்த பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லை. இதனால், பயணியர் வெயில், மழையில் சாலையோரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.பெண்கள், குழந்தைகள், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், முதியோர் உள்ளிட்டோர் சிரமப்படுகின்றனர். எனவே, இந்த பகுதியில், இருக்கை வசதியுடன் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, பயணியர் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.