நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம் மீடியனில் காத்திருக்கும் பயணியர்
ஸ்ரீபெரும்புதுார்:சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நாளொன்றுக்கு லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சென்னையின் இருந்து, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முதன்மை சாலையாக இந்த சாலை உள்ளது.தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வாகனங்களால், நெரிசல் மற்றும் விபத்துகளை தவிர்க்க, 654 கோடி ரூபாய் மதிப்பில், சென்னை -- பெங்களூரு தேசிய நான்குவழிச் சாலையை, ஆறுவழிச் சாலையாக அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.இந்த சாலையில், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து பிரிந்து, குன்றத்துார் மற்றும் ஒரகடம் வழியாக, சிங்கபெருமாள் கோவில் பகுதிகளுக்கு செல்லும் பகுதியில் பேருந்து நிறுத்தம் உள்ளது.ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் பகுதிகளில் இயங்கிவரும் 100க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளுக்கு பணிக்கு செல்லும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி, காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர்.இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுாரில் மிக முக்கிய பேருந்து நிறுத்தமாக விளங்கும் இங்கு, பயணியர் நிழற்குடை இல்லை. இதனால், பயணியர் வெயில், மழையில் சாலையோரம் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.பெண்கள், குழந்தைகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், முதியோர் அனைத்து தரப்பினரும் கடும் சிரமப்படுகின்றனர்.எனவே, அதிக மக்கள் வந்து செல்லும் இந்த பகுதியில், இருக்கை வசதியுடன் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, பயணியர் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.