படப்பை காவல் நிலையம் தயார்
படப்பை; தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட மணிமங்கலம் காவல் நிலையம் உள்ளது. இதன் எல்லைப் பரப்பு அதிகமாக உள்ளதால், குற்றச்சம்பவங்கள் நடந்தால் போலீசார் சம்பவ இடத்திற்கு செல்வற்கு தாமதமாகிறது.இதையடுத்து மணிமங்கலம் காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து படப்பையில் புதிய காவல் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.படப்பை காவல் நிலைய எல்லையில் படப்பை, ஒரத்துார், நாட்டசரன்பட்டு, செரப்பணஞ்சேரி, சாலமங்கலம் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள பகுதிகளை இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இதையடுத்து, படப்பை, பெரியார் நகரில் உள்ள அரசு கட்டடத்தை சீரமைத்து காவல் நிலையம் இயங்குவதற்கு தயார் செய்யப்பட்டுள்ளது.சுமார் 1,200 சதுர அடி அளவு கொண்ட கட்டடத்தின் தரைத்தளத்தில் டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது. இனஸ்பெக்டர் அறை, வரவேற்பு அறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நுழைவு பகுதியில், சிமென்ட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.படப்பை புதிய காவல் நிலையம் கட்டடம் தயாரானதையடுத்து விரைவில் புதிய காவல் நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.