அடிப்படை வசதிகளற்ற மயானம் சித்தாத்துாரில் சிரமப்படும் மக்கள்
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், இளையனார்வேலூர் ஊராட்சிக்கு உட்பட்டது சித்தாத்துார் கிராமம். இக்கிராமத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.சித்தாத்துார் கிராம பகுதியில், உயிர் நீத்தோர் சடலங்களை அடக்கம் செய்யும் மயானமாக, அப்பகுதி செய்யாற்றங்கரையின் ஒரு பகுதியை, நீண்ட காலமாக கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த மயானத்தில், தண்ணீர் வசதி, காத்திருப்போர் இருப்பிடம், மின்விளக்கு மற்றும் மயானத்திற்கு செல்வதற்கான பாதை வசதி போன்ற எவ்வித அடிப்படை வசதியும் இல்லை.மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால், சடலங்களை மயானத்திற்கு கொண்டு செல்ல, வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.எரிமேடை உள்ளிட்ட கட்டட வசதிகள் இல்லாததால், மழை நேரங்களில் சடலங்களை எரிக்க முடியாமல், அப்பகுதியினர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.எனவே, சித்தாத்துார் மயானத்திற்கு பாதை மற்றும் சுற்றுச்சுவர், எரிமேடை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.