ஊத்துக்காடு ஏரி உபரிநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்ற கோரி மனு
வாலாஜாபாத்:ஊத்துக்காடு ஏரி உபரிநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றக்கோரி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.மனு விபரம்:ஊத்துக்காடு கிராம ஏரி பருவ மழைக்காலத்தில் முழுமையாக நிரம்பியதை அடுத்து உபரி நீர் வெளியேறும் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் வாயிலாக செல்லும் தண்ணீர் அப்பகுதியில் உள்ள பொதுக்குளம், குட்டை மற்றும் இதர கண்மாய்களில் நிரம்புகிறது.இந்நிலையில், இக்கால்வாய் மற்றும் குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் அமைந்துள்ள சர்வே எண்; 524/1, 525/2, 526/2 ஆகிய நிலப் பகுதிகள், தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.எனவே, ஊத்துக்காடு ஏரி உபரி நீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.