வடிகால்வாய் வசதி இல்லாததால் கல்வெட்டு கோவிலில் தேங்கும் மழைநீர்
உத்திரமேரூர்:உத்திரமேரூரில், ஸ்ரீதேவி பூதேவி சமேத வைகுண்ட பெருமாள் கோவில் எனப்படும் குடவோலை முறை கல்வெட்டு கோவில் உள்ளது.தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், 1,000 ஆண்டுகளுக்கு முன் முதலாம் பராந்தக சோழனின் ஆட்சி காலத்து, தேர்தல் முறையை விளக்கும் கல்வெட்டு உள்ளது.இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தினமும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு, வடிகால்வாய் வசதி இல்லாமல் உள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழையினால்,கோவில் வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், கோவிலுக்கு சுற்றுலா வரும் பயணியர், சிரமத்திற்கு உள்ளாகினர்.மழை நேரங்களில் இதேபோல வளாகத்தில் மழைநீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. எனவே,குடவோலை முறை கல்வெட்டு கோவில் வளாகத்தில், வடிகால் வசதி ஏற்படுத்த, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.