காவலர் குடியிருப்பு கட்டடத்தில் முளைத்துள்ள அரச மரச்செடிகள்
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரத்தில், சிவகாஞ்சி காவல் நிலையம் பின்புறம், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில், காவலர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பில், 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.வெளி மாவட்டங்களில் இருந்து காஞ்சிபுரத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு பணிமாறுதலாகி வந்துள்ள போலீசார், இங்கு தங்களது குடும்பத்தினருடன் தங்கியுள்ளனர்.முறையான பராமரிப்பு இல்லாததால், அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்தில் அரசமரச்செடிகள் செழித்து வளர்கின்றன. இதனால், கட்டடத்தில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து வருகின்றன. இதனால், நாளடைவில் கட்டடம் வலுவிழக்கும் சூழல் உள்ளது.எனவே, பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள காவலர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் வளர்ந்து வரும் அரச மரச்செடிகளை வேருடன் அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.