மாணவியிடம் அத்துமீறல்? நடத்துநரை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
சென்னை: மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக, மினி பேருந்து நடத்துநரை கைது செய்ய வலியுறுத்தி, உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. வளசரவாக்கத்தைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவி, கடந்த 19ம் தேதி வளசரவாக்கத்தில் இருந்து அசோக் நகர் செல்லும் எஸ்:20 மினி பேருந்தில் பயணித்தார். அதிலிருந்த நடந்துநர், அம்மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், நடத்துநரை கைது செய்ய வலியுறுத்தி மாணவியின் பெற்றோருடன் இணைந்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பினர், நேற்று முன்தினம் இரவு வளசரவாக்கம் காவல் நிலையம் முன், திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் பேசியதையடுத்து, கலைந்து சென்றனர்.