சைக்கிள் நிறுத்துமிடத்திற்கு கூரை வசதி மாணவ - மாணவியர் வலியுறுத்தல்
வையாவூர்: வையாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், சைக்கிள் நிறுத்துமிடத்திற்கு கூரை வசதி ஏற்படுத்தி தர மாணவ - மாணவியர் வலியுறுத்தி வருகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம், வையாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில், மாணவ - மாணவியரின் சைக்கிள் நிறுத்துவதற்கு கூரை வசதி இல்லை. இதனால், மாணவ - மாணவியர், தங்களது சைக்கிளை பள்ளி திறந்தவெளியில் நிறுத்துகின்றனர். நாள் முழுதும் வெயிலில் நிற்கும் சைக்கிளில் 'டியூப்கள்' வெடிப்பதாகவும், ஏற்கனவே பஞ்சர் ஒட்டப்பட்ட இடத்தில், காற்று வெளியேறுவதாகவும், 'வால்டியூப்பில்' ஓட்டை ஏற்படுவதாக மாணவ - மாணவியர் கவலை தெரிவிக்கின்றனர். இதனால், பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது சைக்கிள் பழுதடைந்து இருப்பதால், மாணவ - மாணவியர் வீட்டிற்கு தாமதமாக செல்லும் நிலை ஏற்படுகிறது. மழைக்காலத்தில் சைக்கிள் துருப்பிடித்து பழு தடையும் சூழல் உள்ளது. எனவே, சைக்கிளை பாதுகாக்கும் வகையில், வையாவூர் அரசு உயர் நிலைப் பள்ளியில், சைக்கிள் நிறுத்துமிடத்திற்கு கூரை வசதி ஏற்படுத்தி தர மாணவ - மாணவியர் வலியுறுத்தி வருகின்றனர்.