திருக்காலிமேடு அரசு உயர்நிலை பள்ளி புதிய கட்டடம் வரும் 9ல் திறப்பு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, திருக்காலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவ ---- -மாணவியர் கல்வி பயில்கின்றனர். இப்பள்ளி கட்டடம், அப்பகுதியில் உள்ள சின்ன வேப்பங்குளக்கரையில், வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக அமைந்துள்ளன.இதனால், ஆய்வகம், சத்துணவு போன்ற அறைகளுக்கு செல்ல, சாலையை கடந்தும், குளத்தை சுற்றியும் மாணவர்கள் வர வேண்டியுள்ளது. இதனால், இப்பள்ளிக்கு ஒரே வளாகத்தில் பள்ளி கட்டடடம் அமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், திருக்காலிமேடு குறுக்கு கவரை தெருவில், இடம் தேர்வு செய்யப்பட்டு இரண்டு அடுக்கு மாடியுடன், 12 வகுப்பறை கொண்ட பள்ளி கட்டடம், சமையல் அறை, ஆய்வகம், மாணவ- - மாணவியருக்கு என, தனித்தனியாக கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன், ‛யமஹா மோட்டார்ஸ்' நிறுவனம் சார்பில், புதிய பள்ளி கட்டடம் கட்டப்பட்டது.கட்டுமானப் பணி முடிந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்பு துவக்க நாளான ஜூன் 2ம் தேதி புதிய பள்ளி கட்டடம் திறக்கப்படும் என, பெற்றோர் எதிர்பார்த்தனர். ஆனால், புதிய பள்ளி கட்டடம் திறப்பு விழா, வரும் 9ம் தேதி நடைபெறும் என, கல்வித் துறை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.