வயலக்காவூர் கிராம சாலையில் ஆபத்தான வளைவால் அச்சுறுத்தல்
உத்திரமேரூர்,உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில் இருந்து, புல்லம்பாக்கம், வயலக்காவூர் வழியாக ஆதவப்பாக்கம் இணைப்பு சாலை உள்ளது. இச்சாலை வழியாக வயலக்காவூர், நெய்யாடுவாக்கம், காவாம்பயிர் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களை சேர்ந்தோர், இருசக்கர வாகனங்கள் வாயிலாக இச்சாலையை பயன்படுத்தி, உத்திரமேரூர், காஞ்சிபுரம் போன்ற பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இச்சாலையில், புல்லம்பாக்கம் அடுத்து வயலக்காவூர் கிராம துவக்கப் பகுதியில், அடுத்தடுத்த 2 இடங்களில், அபாயகரமான வளைவுகள் உள்ளன. அப்பகுதியில், எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இரவு நேரங்களில் மின்வசதி இல்லாமல் இருள் சூழந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்தோடு வாகனங்களை இயக்கும் நிலை உள்ளது.எனவே, இச்சாலையில் உள்ள வளைவு பகுதிகளில், எச்சரிக்கை பலகை மற்றும் வேகத்தடை அமைத்து, விபத்துகள் எற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.