காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிரதான கூட்டுசாலைகளை விரிவுப்படுத்தும் பணிக்காக, நெடுஞ்சாலைத் துறையினர் கணக்கெடுக்கும் பணியை துவக்கி உள்ளனர். விபத்தை தடுக்க, நிதி ஒதுக்கீட்டிற்கு ஏற்ப, சாலை விரிவாக்க பணிகள் துவக்கப்படும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களிலும், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலை, இதர சாலை என, மொத்தம், 2,253 கி.மீ., துார சாலைகள் உள்ளன.இதுதவிர, 1,292 கி.மீ., ஒன்றிய சாலைகள், 1,694 கி.மீ., துாரம் ஊராட்சி சாலைகள் என, மொத்தம் 5,239 கி.மீ., துார சாலை வகைப்பாடுகள் உள்ளன. விரிவுபடுத்தும் பணி
கடந்த, 2021ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் அலுவலகம், காஞ்சிபுரம் கலெட்க்ரேட் பின் புற பகுதியில் இயங்கி வருகிறது, இங்கு, 1,122 கி.மீ., துார சாலைகள் மட்டுமே உள்ளன.இதில், வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும், சாலைகளில் துறை சார்ந்த திட்டத்தில், சாலை விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.உதாரணமாக, பள்ளூர் - சோண்டி இடையே, ஒருவழி சாலையை, 41 கோடி ரூபாய் செலவில், மேம்படுத்தப்பட்ட இருவழி சாலையாக விரிவுபடுத்தப்பட்டு உள்ளன.அதேபோல, சென்னை - பெங்களூரு தேசிய நான்குவழிச் சாலையை, 634 கோடி ரூபாய் செலவில், ஆறுவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட சாலை விரிவாக்கத்திற்கு, 795 கோடி ரூபாய் செலவில், சாலை விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.அந்த வரிசையில், ஒவ்வொரு நெடுஞ்சாலை உதவிக்கோட்டத்திற்கு, தலா இரண்டு பிரதான கூட்டு சாலைகளை தேர்வு செய்து, வாகனப் போக்குவரத்திற்கு ஏற்ப விரிவுபடுத்தப்பட உள்ளன.குறிப்பாக, காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டத்தில், பள்ளூர்- - சோகண்டி சாலை மற்றும் பொன்னேரிக்கரை- - பரந்துாருக்கு செல்லும் கூட்டு சாலை. மாகரல் ஆகிய இரு கூட்டு சாலைகள் கணக்கெடுத்து தேர்வு செய்யப்பட்டு உள்ளது.இதேபோல, ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை உதவி கோட்டத்திலும், இரு பிரதான கூட்டு சாலைகள். உத்திரமேரூர் நெடுஞ்சாலை உதவி கோட்டத்தில் இரு இடங்கள் என, காஞ்சிபுரம் நெடுஞ்சாலை கோட்டத்தில், ஆறு கூட்டு வழி சாலையை விரிவுபடுத்த, கணக்கெடுப்பு நடத்தி இடம் தேர்வு செய்யப்பட உள்ளன. விபத்துகள் தடுக்கப்படும்
இந்த கூட்டுசாலைகளில், நெடுஞ்சாலைத்துறையினர் அளவீடு மற்றும் வாகனங்கள் செல்லும் எண்ணிக்கை என, இரு விதங்களில் கணக்கெடுப்பு செய்து வருகின்றனர். விரைவில், பிரதான கூட்டு சாலைகள் விரிவுப்படுத்தப்படும் என, நெடுஞ்சாலைதுறையினர் தெரிவித்து உள்ளனர்.இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதான கூட்டு சாலைகளை, விரிவுப்படுத்த இடம் தேர்வு செய்வதற்கு, கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.ஒவ்வொரு உதவிக்கோட்டத்திற்கும், இரு இடங்கள் தேர்வு செய்து, விரிவுப்படுத்தப்படும். அடுத்தடுத்து வரும் நிதி ஆண்டுகளில் கூடுதல் எண்ணிக்கை கூட்டுசாலைகளை தேர்வு செய்து, கிடைக்கும் நிதிக்கு ஏற்ப, பிரதான கூட்டு சாலை விரிவுப்படுத்தப்படும். இதன் வாயிலாக, பிரதான வளைவுகளில் விபத்துகள் தடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.