புதுப்பொலிவு பெறுகிறது உத்திரமேரூர் சிறுவர் பூங்கா
உத்திரமேரூர்:உத்திரமேரூரில் சிறுவர் பூங்காவை புதுப்பிக்கும் பணிகள் முடிந்து, இம்மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என, பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. உத்திரமேரூர் பேரூராட்சி, 4-வது வார்டில், காஞ்சிபுரம் செல்லும் சாலையோரத்தில் சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்காவை அப்பகுதி சிறுவர்கள் பயன்படுத்தி வந்தனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பூங்கா பராமரிப்பின்றி இருந்தது. பூங்காவில் சுற்றுச்சுவர் இடிந்த நிலையிலும், விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தும் இருந்தன. எனவே, இந்த பூங்காவை புதுப்பிக்க, அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, பேரூராட்சி நிர்வாகத்தினர், ஆறு லட்சம் ரூபாயில், சிறுவர் பூங்காவை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது, சிறுவர் பூங்காவில் தாழ்வான பகுதிகளில் மண் கொட்டி சமன் செய்யப்பட்டு, சுற்றுச்சுவரும் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டு, வர்ணம் பூசும் பணியும் நடந்து வருகின்றன. இதுகுறித்து, உத்திரமேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் பழனிகுமார் கூறுகையில், ''உத்திரமேரூர் பேரூராட்சி, 4வது வார்டில் சிறுவர் பூங்கா புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. பணிகள் முடிக்கப்பட்டு இந்த மாத இறுதிக்குள், சிறுவர் பூங்கா பயன்பாட்டுக்கு வரும்,'' என்றார்.