அலைபேசி டவரில் ஏறி மிரட்டல் விடுத்த குஜராத் போலீஸ்காரர்
நாகர்கோவில்:நாகர்கோவிலில் வங்கி கணக்கை முடக்கியதால் 250 அடி உயர அலைபேசி டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் மீட்டனர்.நேற்று காலை 10:00 மணியளவில் நாகர்கோவில் கே.பி.ரோட்டில் பி.எஸ்.என்.எல்., அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள 250 அடி உயர டவரில் ஏறிய ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். தீயணைப்பு துறையினரும், போலீசாரும் அங்கு சென்று விசாரித்தனர். தன் வங்கி கணக்கை முடக்கி வைத்துள்ளதாகவும் அதை சரி செய்தால் மட்டுமே டவரில் இருந்து இறங்குவதாகவும் அந்த நபர் கூறினார்.வங்கி கணக்கை சரி செய்து தருவதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அந்த நபர் கீழே இறங்க முயற்சித்தார். ஆனால் தனக்கு பயமாக இருப்பதாக கூறியதையடுத்து தீயணைப்புத் துறையினர் மேலே சென்று அவரை மீட்டு வந்தனர்.விசாரணையில் அவர் குஜராத்தைச் சேர்ந்த இம்ரான் கான் என்பது தெரியவந்தது. அங்கு போலீசாக வேலை செய்வதாகவும், மருத்துவ விடுப்பில் இருப்பதாகவும் கூறினார். தன் வங்கி கணக்குக்கு ஒருவர் 15 ஆயிரம் ரூபாய் அனுப்பியதாகவும், அதை தான் செலவு செய்ததாகவும், தற்போது அந்த பணத்தை திருப்பி செலுத்தும் படி வங்கி நிர்வாகம் கூறியதால் திருப்பி செலுத்த ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். மேலும் மகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு எர்ணாகுளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதற்கும் பணம் எடுக்க முடியாத நிலை உள்ளதாகவும் இம்ரான்கான் கூறினார். இது தொடர்பாக குஜராத் மாநில போலீசாரிடம் கன்னியாகுமரி மாவட்ட போலீசார் விசாரித்து வருகின்றனர்.