அதிக கட்டணத்தால் ஆர்வம் காட்டாத பயணிகள்
நாகர்கோவில்,:அதிக கட்டணத்தால் சுற்றுலா பயணிகளுக்கு ஆர்வமின்மையால் கன்னியாகுமரியில் ரூ.10 கோடி மதிப்பிலான இரண்டு படகுகள் நாளுக்கு நாள் துருப்பிடித்து வீணாகிவருகிறது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு பூம்புகார் போக்குவரத்து கழகம் படகுகளை இயக்குகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா படகுகள் பயன்படுத்தப்படுகிறது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ரூ. 10 கோடி செலவில் தாமிரபரணி, திருவள்ளுவர் என்ற இரண்டு அதிநவீன சொகுசு படகுகளை பூம்புகார் போக்குவரத்து கழகம் வாங்கியது.ஆனால் இவை சாதாரண படகுகளை போல் அல்லாமல் சற்று நீளமாக அமைந்துள்ளதால் விவேகானந்தர் பாறை பக்கம் இதை கட்டுவதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் சின்னமுட்டம் துறைமுகத்திலேயே இது நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் கன்னியாகுமரியில் இருந்து வட்டகோட்டை வரை படகுகளை இயக்க முடிவு செய்து கடந்த மே மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இதற்காக நபர் ஒன்றுக்கு 'ஏசி 'வசதியுடன் ரூ.450, சாதாரண இருக்கைக்கு ரூ.350 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அதிக கட்டணம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் இதில் பயணம் செய்ய ஆர்வம் காட்ட வில்லை. ஒரு சில நாட்கள் மட்டுமே கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு இந்த படகு சென்று வந்தது. தற்போது கன்னியாகுமரி படகு துறையில் இந்த இரண்டு படகுகளும் கட்டி போடப்பட்டுள்ளது.கடல் உப்பு காற்றின் தாக்கத்தால் அவை சிறிது சிறிதாக துருப்பிடித்துக் கொண்டிருக்கிறது. கட்டணத்தை குறைத்து வட்ட கோட்டைக்கு இந்த படகுகளை இயக்கும் பட்சத்தில் கூடுதல் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று சுற்றுலா ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால் இது பற்றி அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று பூம்புகார் போக்குவரத்து கழக நிர்வாகம் கூறுகிறது.