விவேகானந்தர் மண்டபத்தின் 55 வது ஆண்டு விழா
நாகர்கோவில்:கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் 55 -வது ஆண்டு விழா நடந்தது. 1892 டிசம்பர் 25, 26, 27 தேதிகளில் சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் தவம் செய்தார். அதன் பின் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகருக்கு சென்று அவர் ஆற்றிய உரை உலக பிரசித்தி பெற்றது. 1964 ல் அவர் தவம் செய்த பாறையில் நினைவு மண்டபம் கட்டும் பணி துவங்கி 1970 -ல் நிறைவு பெற்று செப்டம்பர் இரண்டாம் தேதி அப்போதைய ஜனாதிபதி வி.வி. கிரியால் திறந்து வைக்கப்பட்டது. இதன் 55 வது ஆண்டு விழா நேற்று விவேகானந்தர் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. காலை 8:00 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிடுவதற்காக வந்தவர்களில் முதலில் மண்டபத்துக்குள் நுழைந்த உத்தர பிரதேச மாநிலம் ஜவுன்பூரைச் சேர்ந்த செசானக் சிங் என்ற சுற்றுலா பயணிக்கு கேந்திரா சார்பில் நினைவுப்பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது. கடந்த 55 ஆண்டுகளில் 7 கோடியே 45 லட்சத்து 77 ஆயிரத்து 933 பேர் இந்த மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர்.