மனைவியை தற்கொலைக்கு துாண்டியதாக கணவர் கைது
நாகர்கோவில்: நாகர்கோவிலில் காதல் திருமணம் செய்த மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், கணவரை போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்டம், நாகர்கோவில் கீழமறவன் குடியிருப்பை சேர்ந்தவர் செல்வ சரண், 25; டிரைவர். இவரது மனைவி ரேஷ்மா, 20. இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். உறவு முறையில் செல்வ சரண், ரேஷ்மாவுக்கு அத்தை மகன். கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டபோது, ரேஷ்மா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோட்டார் போலீசார் விசாரணையில், ரேஷ்மாவை கணவர் தற்கொலைக்கு துாண்டியது தெரியவந்தது. ரேஷ்மா தன் தாய்க்கு அனுப்பிய, 'வாட்ஸாப்' குறுஞ்செய்தியில், 'கணவருக்கு என்னை பிடிக்கவில்லை. அவர் வேறு திருமணம் செய்ய போகிறார். காதலித்தது தவறு' என, குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து, செல்வ சரணை போலீசார் கைது செய்தனர்.