பந்தளத்தில் திருவாபரணத்தை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
நாகர்கோவில்:திருவாபரண பவனிக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் பந்தளத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளது. இங்கு திருவாபரணத்தை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.ஜன.,14 -ல் சபரிமலையில் மகரஜோதி திருவிழா நடைபெறுகிறது. இதற்காக ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக பந்தளத்தில் இருந்து திருவாபரண பவனி ஜன.,12 -ல் புறப்படுகிறது. இந்த பவனியின் முன்னால் பந்தளம் மன்னர் பிரதிநிதி பல்லக்கில் துாக்கிச் செல்லப்படுவார். இதற்காக பல்லக்கு புதுப்பிக்கும்பணி பந்தளத்தில் தொடங்கியுள்ளது. பல்லக்கில் உள்ள பழுதுகள் நீக்கப்பட்டு புதிதாக வண்ணம் தீட்டப்படுகிறது.இதற்கிடையில் பந்தளம் சிராம்பிக்கல் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள திருவாபரணங்களை வணங்க பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நவ., 16 ம் தேதி தரிசனத்திற்காக திருவாபரண பேடகங்கள் திறந்து வைக்கப்பட்டன. ஜன.11 வரை இந்த அரண்மனையில் பக்தர்கள் தரிசிக்கலாம். ஜன. 12 அதிகாலை 5:30 முதல் மதியம் 12:00 வரை பந்தளம் சாஸ்தா கோயில் வாசலில் திருவாபரணங்களை தரிசிக்க முடியும்.ஆண்டுக்கு மூன்று முறை மட்டுமே திருவாபரணங்கள் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்படுகிறது. அதன்படி மண்டல, மகர விளக்கு காலத்திலும், பங்குனி மாதம் உத்திரம் நாளிலும், சித்திரை விஷுவுக்கும் தரிசிக்கலாம்.