கரூர்: கால்நடை மருந்தகத்தை, மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை தேவை என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் பவித்திரம், குப்பம், புன்னம்சத்திரம், கார்வழி, தென்னிலை, சின்னதாராபுரம், துலுக்கம்பாளையம், எலவனுார், முடிகணம், கோடந்துார் ஆகிய, 11 கால்நடை மருந்தகங்கள் செயல்பட்டு வருகிறது. குக்கிராமங்களில், தற்போது போதிய மழை இல்லாததால் விவசாயத்தில் மிகவும் பின்தங்கிய வறட்சி பகுதியாக க.பரமத்தி உள்ளது. இங்கு கிணற்று நீரை கொண்டு விவசாயம் செய்தும், ஆடு, மாடு, எருமை, கோழிகளை விவசாயிகள் வளர்த்து ஜீவனம் செய்து வருகின்றனர்.கால்நடை வளர்ப்போருக்காக அவ்வப்போது, க.பரமத்தி ஒன்றிய பகுதி கால்நடை மருந்தகங்கள் சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் தென்னிலை, சின்னதாராபுரம் க.பரமத்தி ஆகிய மூன்று வெவ்வேறு பகுதிகளில் செயல்படும் பகுதிகளில் கால்நடைகள் அதிகம் வளர்க்கப்படுவதால், இரவு நேரங்களில் சிகிச்சைகாக இங்கிருந்து கால்நடைகளை மருத்துவமனைக்கு, குறிப்பாக நாமக்கல் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.சில இடங்களில் நோய் தாக்கும் கால்நடைகளை விவசாயிகள் தொலை துாரம் கொண்டு செல்வதற்குள் அவை இறந்து விடுகின்றன. கால்நடை மருந்தகத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்தி, 24 மணி நேரமும் கால்நடைகளுக்கு மருத்துவ சேவை கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கால்நடை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.