சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் ஆபத்து
கரூர், நெடுஞ்சாலையில், கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். கரூர் தொழிற்பேட்டையில், 20க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அங்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு டாஸ்மாக் ஆகிய குடோன்களும் உள்ளன. இங்குள்ள குடோன்களில், வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாததால், கரூர்-திருச்சி பழைய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படுகின்றன. இதனால், இப்பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, சில நேரங்களில் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்த சாலையில், ரோந்து வரும் போலீசாரும், சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்துவதில்லை. இந்த சாலை வழியே, இருசக்கர வாகனங்களில் செல்வோர் அச்சத்தில் பயணிக்கின்றனர்.எனவே, நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.