தீயணைப்பு நிலையம் சார்பில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி
கரூர், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், புகழூர் தீயணைப்பு நிலையம் சார்பில், பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி, தவிட்டுப்பாளையம் காவிரியாற்றில் நடந்தது.தென்னிந்திய பகுதிகளான தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக, இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்திலும், தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால், வடகிழக்கு பருவ மழையின் போது, வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில், வெள்ளத்தில் சிக்கியவர்களை, மீட்கும் பொருட்டு செயல்படுவது குறித்து, கரூர் அருகே தவிட்டுப்பாளையம் காவிரியாற்றில், புகழூர் தீயணைப்பு நிலையம் சார்பில் ஒத்திகை பாதுகாப்பு பயிற்சி நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேல், புகழூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.