உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இங்கிலாந்துடன் வரியில்லா ஒப்பந்தம் கரூர் ஏற்றுமதியாளர் மகிழ்ச்சி

இங்கிலாந்துடன் வரியில்லா ஒப்பந்தம் கரூர் ஏற்றுமதியாளர் மகிழ்ச்சி

கரூர்,-இந்தியா - இங்கிலாந்து இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால், கரூருக்கு பெரிய வாய்ப்பாக அமையும் என, கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:இந்தியா - இங்கிலாந்து இடையேயான, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மூலம், இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும், குறிப்பிட்ட சில பொருள்களுக்கு பூஜ்ய சதவீத இறக்குமதி வரி என்ற அடிப்படையில், வரி இல்லாமல் விற்பனைக்கு வரும். அந்த பொருள்கள் இறக்குமதி செய்யப்படும் விலையை விட, குறைவானதாக இருக்கும்.இந்தியாவிலிருந்து, இங்கிலாந்துக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஆயத்த ஆடைகள் மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருள்கள் ஏற்றுமதியாகின்றன. இந்த புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம், இன்னும் மூன்று ஆண்டுகளில் இது இரு மடங்காக உயர வாய்ப்பு அதிகம். ஜவுளி தொழிலில், இந்தியாவுக்கு போட்டியாக இருக்கக்கூடிய பல நாடுகளின் இறக்குமதி வரி, இங்கிலாந்தில் இந்தியாவை விட குறைவாக இருந்தது.இதன் காரணமாக, இந்திய ஜவுளி பொருள்களின் விலை, இங்கிலாந்தில் மற்ற நாடுகளின் ஜவுளி பொருள்களை விட சிறிது அதிகமாகவே இருந்தது. தற்போதைய புதிய ஒப்பந்தத்தின் மூலம், இந்திய ஜவுளி பொருள்கள், இங்கிலாந்து சந்தையில் மற்ற நாடுகளின் ஜவுளி பொருள்களின் விலையோடு போட்டியிட முடியும். இது, இந்திய ஜவுளி தொழிலுக்கு வளர்ச்சியை கொடுப்பதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. கரூர் ஜவுளி ஏற்றுமதியில், இங்கிலாந்து ஒரு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம், கரூர் ஜவுளி தொழில் வளர்ச்சி பாதையில் செல்வதற்கு வாய்ப்பாக இருக்கும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை