கிருஷ்ணராயபுரத்தில் உங்களை தேடிஉங்கள் ஊரில் திட்ட முகாம்
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் வட்டத்தில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடந்தது.கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். பின், அவர் கூறியதாவது:கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் உள்ள, அனைத்து வருவாய் கிராமங்களிலும் அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வருகின்றனர். அதில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரேஷன் கடைகள், வி.ஏ.ஓ., அலுவலகம், வட்டார பொது சுகாதார மைய கட்டடம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், சத்துணவு கூடங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர். கள ஆய்விற்கு செல்லும் அலுவலர்கள் அப்பகுதிகளில் தங்கி இன்று காலை, 6:00 மணி முதல் அவ்வட்டத்தில் மேற்கொள்ளப்படும் துாய்மை பணிகள், குடிநீர் வசதிகள், பொது போக்குவரத்து சேவை, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், பால் வினியோகம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.இவ்வாறு, கூறினார்.பின், 24 பயனாளிகளுக்கு, 19.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆய்வின் போது டி.ஆர்.ஓ., கண்ணன், குளித்தலை சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ, மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், மருத்துவ பணி இணை இயக்குனர் செழியன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணியன், வேளாண் இணை இயக்குனர் சிவானந்தம், ஆவின் மேலாளர் பிரியா உள்பட பலர் பங்கேற்றனர்.