சாலையில் கால்நடைகள் நடமாட்டம் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
கரூர்: கரூரில் ஆடு, மாடுகளை வளர்ப்போர், அவற்றை சாலையில் திரிய விடுவதால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் செல்கின்றனர்.கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆடு, மாடு வளர்த்து வருகின்றனர். பிற பகுதிகளில், கால்நடைகள் மேய்ச்சல் நிலங்களில் விடப்பட்டு வருகிறது. கரூர் மாநகராட்சியை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். இப்பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருபவர்கள், அவற்றை தங்களது வீடுகளில் கட்டி வளர்க்காமல் சாலையில் திரிய விடுகின்றனர். இதனால், கரூர் ரயில்வே ஸ்டேஷன், கோவை சாலை, ஜவகர் பஜார், வெங்கமேடு உள்பட பல்வேறு சாலைகளில் சுற்றி திரிகின்றன.இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் திடீரென வாகனங்களின் குறுக்கே பாய்வதால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் பயணிக்கின்றனர். கால்நடைகளை சாலையில் திரிய விடும் உரிமையாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.