அடிப்படை வசதி கேட்டு நங்கவரம் மக்கள் போராட்டம்
கரூர், கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், நங்கவரம் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.கரூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. குளித்தலை அருகில் நங்கவரம், நச்சலுார், தேவர்மலை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு, 25க்கும் மேற்பட்டோர் மனு கொடுக்க வந்தனர். அப்போது, போலீசார் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால், கலெக்டர் வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை. கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் எங்களுக்கு, பட்டா கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர்.இவ்வாறு கூறினர்.