கரூரில் நவராத்திரி விழா துவக்கம் முப்பெரும் தேவியருக்கு வழிபாடு
கரூர்: கரூரில், முப்பெரும் தேவியருக்கு வழிபாடு செய்து, நவராத்திரி விழா துவங்கியது.நவராத்திரி விழா என்பது, மக்களை துன்புறுத்தி வந்த மகிஷாசூரன் என்ற அரக்கனுடன், ஆதிபராசக்தி ஒன்பது நாட்கள் போரிட்டு, 10-வது நாளில் அவனை வதம் செய்து வெற்றி கொண்டதாக ஐதீகம். இதனை நினைவு கூறும் வகையில், நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. கரூர் மாவட்டத்தில் வீடுகளில் கொலு பொம்மைகளை, 3, 6, 9, 12, 15, 18 படி வரிசைகளில் வைத்து கலசம் அமைத்து, நவராத்திரி வழிபாடுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், நேற்று முன்தினமே தயார் செய்தனர். துவக்க நாளான நேற்று காலை, அம்பிகைக்கு நைவேத்தியம் படைத்து வழிபட துவங்கினர். நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும், சக்தியின் ஒவ்வொரு வடிவத்தையும், முதன்மைப்படுத்தி வழிபடுவர். ஒன்பது நாட்கள் நவராத்திரி வழிபாடு நிறைவடைந்து, பத்தாவது நாளில் விஜயதசமி விழா, விமரிசையாக கொண்டாடப்படுகிறது.இதேபோல கோவில்களிலும் நவராத்திரி விழா தொடங்கியது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கொலு பொம்மை வைக்கப்பட்டுள்ளது. இதில் கடவுள் செட் பொம்மைகள், இயற்கை காட்சி, வனவிலங்குகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. விழாவின் முதல் நாளான நேற்று, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டி உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், சேமங்கி, நன்செய் புகழூர், புன்னம், திருக்காடுதுறை தவுட்டுப்பாளையம் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.