குளித்தலை: குளித்தலை அடுத்த ஆதனுார் பஞ்., பகுதியில் மரக்கன்று நட்டு பசுமையாக மாற்றி, சுற்றுச்சூழலை பாதுகாக்க பஞ்., நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, ஆதனுார் பஞ்., மற்றும் வனத்துறை சார்பில் மரக்கன்று நடுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, கிராமப்புற மேம்பாட்டுக்காக மரக்கன்று நடுதல், அவற்றை முறையாக பராமரித்தல், சுற்றுச்சூழல்களை பாதுகாத்தல் போன்ற செயல்பாடுகளை, கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை, ஆதனுார் பஞ்., சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.இதன் ஒரு பகுதியாக, ஆதனுார் பஞ்., பகுதியில் உள்ள செட்டிக்குளத்தில் பஞ்., தலைவர் பூமா, தலைமையில் மரக்கன்று நடுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தோகைமலை வனச்சரக அலுவலர் கனகராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட வனத்துறை அலுவலர் சரவணன், மரக்கன்று நட்டு வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.மேலும், குளத்தின் ஓரங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது போல், கிராமப்புறங்களில் உள்ள கோவில்கள், அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் உள்பட முக்கிய கிராமப்புற சாலை மற்றும் பொது இடங்களில் வேம்பு, பாதாம், புங்கன் போன்ற பல்வேறு மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என, தெரிவித்தார்.தொடர்ந்து, குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மா, கொய்யா, பலா, தென்னை, வேம்பு, சரக்கொன்றை, புங்கன், பாதாம் உள்பட பல்வேறு வகையான மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பஞ்., தலைவர் பூமா, துணைத்தலைவர் நாகலட்சுமி குமார், செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.