கோவில் இடம் கையகப்படுத்த எதிர்ப்பு; அறநிலையத்துறை அலுவலகம் முற்றுகை
கரூர்: கரூர் அருகே, கோவிலுக்கு சொந்தமான இடங்களை, கையகப்படுத்துவதை எதிர்த்து, பொதுமக்கள் ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.கரூர் மாவட்டம், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பெயரில், பட்டா உள்ள காலி இடங்கள், வீட்டுமனைகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வெண்ணைமலையில் உள்ள ஐயப்பன் கோவில், தனியார் வங்கி அலுவலகம் உள்பட, ஏழு இடங்களை கையகப்படுத்தும் வகையில், நேற்று ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மாலை, கரூரில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, உதவி கமிஷனர் ரமணி காந்தன் அலுவலகத்தில் இல்லை. கண்காணிப்பாளர் யுவராஜ் மற்றும் ஊழியர்கள் மட்டுமே இருந்தனர்.இதனால், நாளை (இன்று) காலை வெண்ணைமலை பாலசுப்பிரமணிய கோவில் செயல் அலுவலர் அலுவலகத்தில், இடம் கையகப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என, ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.