கரூரில் உயர்கல்வியில் சேராத மாணவருக்கு உயர்வுக்கு படி நிகழ்ச்சி
கரூர், கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று உயர் கல்வியில் சேராத மாணவர்களுக்கான உயர்வுக்கு படி நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில், கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது: மாவட்டத்தில் ஐ.டி.ஐ., கலை அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் கல்லுாரிகள் உள்ளன. தற்போது இக்கல்வி நிறுவனங்களில் பல்வேறு இடங்கள் காலியாக உள்ளன. மாணவ, மாணவியர் உடனடியாக அவர்களுடைய விருப்ப பாடப் பிரிவுகளை தேர்ந்தெடுத்து உயர் கல்வியில் சேர வேண்டும். உயர் கல்வியில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. குடும்ப சூழ்நிலையால், உயர்கல்வி தொடர முடியாதவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கின்றனர். கல்வி ஒன்றே மாணவர்களின் உயர்வுக்கு உறுதுணையாக இருக்கும். மூன்று முகாம்கள் மூலம் மொத்தம், 368 மாணவர்கள் கலந்து கொண்டதில், 62 பேர் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் செல்வமணி, கலால் உதவி ஆணையர் முருகேசன், மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.