ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நிழற்கூடம் இல்லாததால் அவதி
கரூர்: கரூர் அருகே, ஆரம்ப சுகாதார நிலையம் முன், நிழற்கூடம் இல்லாததால், பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.கரூர் மாவட்டம், கருப்பம்பாளையம் பஞ்சாயத்து, அப்பிபாளையம் சாலையில், ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அதில், சுற்று வட்டார பகுதிகளில், 25க்கும் மேற்பட்ட குக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பல்வேறு நோய்களுக்காக சிகிச்சை பெற செல்கின்றனர். ஆனால், ஆரம்ப சுகாதார நிலையம் முன் நிழற்கூடம் இல்லாததால், பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள் சிரமப்படுகின்றனர். பஸ்சுக்காக, வெயில், மழை காலங்களில் ஒதுங்க இடம் இல்லாமல், அருகில் உள்ள வீடுகளில் தஞ்சம் புகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கருப்பம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் முன், பயணிகள் நிழற்கூடம் அமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.