துாய்மை பணி மேற்கொண்ட த.வெ.க.,வினர் அரசு பள்ளி தலைமையாசிரியர் இடமாற்றம்
கரூர், தென்னிலை, அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த துாய்மை பணி குறித்து, த.வெ.க., வெளியிட்ட வீடியோ சர்ச்சையானதால், அப்பள்ளி தலைமையாசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில், தென்னிலை அரசு மேல்நிலைப் பள்ளியில், துாய்மை பணி உள்பட பல்வேறு பணிகளை, சில நாட்களுக்கு முன், த.வெ.க., சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான வீடியோக்களை, இன்ஸ்டாகிராம் உள்பட சமூக வலைதளங்களில் அக்கட்சியினர் பதிவிட்டனர். இது சர்ச்சையான நிலையில், அந்த பள்ளி தலைமையாசிரியர் சுஜாதா சியாமளா பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து, முதன்மை கல்வி அலுவலர் (பொ) செல்வமணி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, தென்னிலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியரிடம் இருந்து பெறப்பட்ட புகார் அடிப்படையில், மாவட்ட சமூக அலுவலர் விசாரணை மேற்கொண்டார். அந்த அறிக்கையின் அடிப்படையில், இப்பள்ளி தலைமை ஆசிரியர் சுஜாதா சியாமளா, குளித்தலை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.