புதர் மண்டிய செடிகளால் நீர் செல்வதில் பாதிப்பு
கிருஷ்ணராயபுரம், வல்லம் பாசன வாய்க்காலில், நாணல் செடிகள் வளர்ந்து வருவதால் பாசன நீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிள்ளபாளையம் கட்டளை மேட்டு வாய்க்கால் பகுதியில் இருந்து, வல்லம் பகுதிக்கு வாய்க்கால் நீர் விளை நிலங்களுக்கு செல்கிறது.நெல், வாழை, சோளம், எள் பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது சிறிய பாசன வாய்க்கால் இருபுறமும், அதிகமான நாணல் செடிகள் வளர்ந்து புதர்போல் மண்டி வருகிறது.இதனால் பாசன வாய்க்கால் வழியாக செல்லும் பாசன நீர், விளை நிலங்களுக்கு செல்வதில் தடை ஏற்படுகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால், முழுமையாக செல்வதில் பாதிப்பு உள்ளது.தற்போது விவசாயிகள் நெல் சாகுபடிக்காக உழவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விளை நிலங்களுக்கு தண்ணீர் தடையின்றி செல்லும் வகையில், பாசன வாய்க்காலில் வளர்ந்து வரும் நாணல் செடிகளை அகற்ற, 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.