கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
கரூர், கரூர் மாவட்டத்தில், நேற்று அதிகாலை வரை பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக பாலவிடுதியில், 22 மி.மீ., மழை பதிவானது.கரூர் மாவட்டத்தில் கடந்த, 2 முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்ய தொடங்கிய மழை, பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை வரை நீடித்தது. நேற்று காலை, 8:00 மணி வரை மழையளவு (மி.மீ.,) விபரம்: குளித்தலை, 5.20, தோகைமலை, 2, கிருஷ்ணராயபுரம், 8.50, மாயனுார், 10, பஞ்சப்பட்டி, 4.60, கடவூர், 10.50, பாலவிடுதி, 22, மயிலம்பட்டி, 16 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 6.57 மி.மீ., மழை பெய்தது. மழை காரணமாக மானாவாரி விளை நிலங்களில் எள், துவரை, நிலக்கடலை ஆகிய பயிர்கள் சாகுபடி செய்வதற்கான பணிகள் துவங்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.* அரவக்குறிச்சியில், நேற்று முன்தினம் இரவு லேசான மழை பெய்தது. நேற்று மதியம் முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் மாலை 3:00 மணி முதல் கனமழை பெய்தது. தொடர்ந்து, 2 மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் ஆறுபோல ஓடியது. மழையால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த காற்று வீசுவதால் விவசாயி கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.* கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 14 ஆயிரத்து, 469 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 15 ஆயிரத்து, 378 கன அடியாக அதிகரித்தது. அதில் டெல்டா மாவட்டங்களில், சாகுபடிக்காக காவிரியாற்றில், 14 ஆயிரத்து, 854 கன அடியும், தென்கரை வாய்க்காலில், 600 கன அடி தண்ணீரும், கீழ் கட்டளை வாய்க்காலில், 350 கன அடி தண்ணீரும், புதிய கட்டளை வாய்க்காலில், 400 கன அடியும், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 20 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 183 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 16.66 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.