| ADDED : ஆக 07, 2024 01:23 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், அங்கொண்டப்பள்ளி கிராமம் அருகே, தனிநபர்கள் நிலம் வாங்கி லே - அவுட் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு, சாலை வசதி இல்லாததால், லே - அவுட்டுகளை விற்பனை செய்ய முடியாது என, அப்பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான, 3 ஏக்கர் நிலம் மற்றும் 4 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, அங்கிருந்த மரங்களை வெட்டி நிலத்தை சமன் செய்து, சாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இரவில் 'பொக்லைன்' கொண்டு சாலை அமைக்கும் பணி நடந்து வந்தது. இதுகுறித்து, வருவாய்த்துறையிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அங்கொண்டப்பள்ளி கிராம மக்கள், 50க்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, மூன்று பொக்லைனை சிறைபிடித்தனர். சூளகிரி தாசில்தார் சக்திவேல் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். தாசில்தார் சக்திவேல், மூன்று பொக்லைனை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்.