ஓசூர் அரசு மருத்துவமனை பராமரிப்பில் 2 குழந்தை; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ஓசூர்: ஓசூர், அரசு மருத்துவமனை பராமரிப்பில் ஒரு ஆண், பெண் குழந்தை உள்ளது. அதை மீட்டு பராமரிக்க வேண்டிய டி.சி.பி.ஓ., மற்றும் சி.டபிள்யூ.சி., அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு மருத்துவமனையில் கடந்த, 34 நாட்களுக்கு முன், கர்ப்பிணி ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதேபோல் கடந்த, 1ம் தேதி, பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைகளை விட்டு விட்டு பெற்றோர் சென்று விட்டனர். அதனால் வேறு வழியின்றி, ஓசூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள் குழந்தைகளை பராமரித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு (டி.சி.பி.ஓ.,) அலகு மற்றும் குழந்தைகள் நல குழு (சி.டபிள்யூ.சி.,) ஆகியவற்றுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன்படி, ஓசூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால், நேற்று வரை குழந்தைகளை மீட்டு பராமரிக்க தேவையான நடவடிக்கையை எடுக்கவில்லை.குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால் திருப்பத்துார், சேலம், தர்மபுரியில் உள்ள தனியார் என்.ஜி.ஓ.,க்களிடம் ஒப்படைக்க அதிகாரிகள் உடனடியாக ஏற்பாடு செய்கின்றனர். அவற்றை என்.ஜி.ஓ.,க்கள் பெற்றுக்கொண்டு, பராமரிப்புக்கு தேவையான நிதியை அரசிடம் இருந்து பெற்று கொள்ளும். ஆனால், ஓசூர் அரசு மருத்துவமனையில் பெற்றோரால் கைவிடப்பட்ட இரு குழந்தைகளும், மாற்றுத்திறனாளிகள் போல் உள்ளனர் அதனால், அவர்களை மீட்டு என்.ஜி.ஓ.,க்களிடம் ஒப்படைக்க அதிகாரிகள் மனமில்லாமல் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.