உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பாலிடெக்னிக் கல்லுாரி பின்புறம் வனப்பகுதியில் 35 யானைகள் முகாம்

அரசு பாலிடெக்னிக் கல்லுாரி பின்புறம் வனப்பகுதியில் 35 யானைகள் முகாம்

ஓசூர், டிச. 18-சானமாவு வனத்திலிருந்து தேன்கனிக்கோட்டை நோக்கி விரட்டப்பட்ட, 35 யானைகள், அங்கு செல்லாமல், போடிச்சிப்பள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி பின்புறம் முகாமிட்டன.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை வனச்சரகம், ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில் இருந்த, 35 க்கும் மேற்பட்ட யானைகள், 2 குழுக்களாக பிரிந்து, ஓசூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சானமாவு காப்புக்காட்டிற்கு இடம் பெயர்ந்தன. அவற்றை நேற்று முன்தினம் இரவு, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். கெலமங்கலம் - உத்தனப்பள்ளி சாலையை, போடிச்சிப்பள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அருகே கடந்த யானைகள், ஜக்கேரி, ஒன்னுகுறுக்கை, பச்சப்பனட்டி வரை சென்றன. அங்கிருந்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு செல்ல வேண்டிய யானைகள், மீண்டும் சானமாவு வனப்பகுதி நோக்கி திரும்பின. வழியில், போடிச்சிப்பள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி பின்புறமுள்ள வனப்பகுதியில் தஞ்சமடைந்தன. பகலில் யானைகளை விரட்டினால், மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், நேற்று மாலை வரை யானைகளை வனத்துறையினர் கண்காணித்து, இரவில் தேன்கனிக்கோட்டை நோக்கி விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், தேன்கனிக்கோட்டை வனத்திலிருந்து இடம் பெயர்ந்த, 'கிரி' என்ற ஒற்றை யானை நேற்று, உத்தனப்பள்ளி, பென்னிக்கல்லில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி விட்டு, சானமாவு வனப்பகுதிக்கு சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ