குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி, நவ. 9-செட்டிமாரம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், குழந்தை திருமணம் தடுப்பு மற்றும் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஊர் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, காவேரிப்பட்டணம் ஒன்றியம், செட்டி மாரம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் கிராமத்தில், பாரதி கிராமியக்கலை வளர்ச்சி மைய குழு சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.குழந்தை திருமணம் மற்றும் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்த கருத்துக்கள் அடங்கிய பாடல்கள், தப்பாட்டம், கரகாட்டம் மற்றும் நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாவட்ட சமூகநல அலுவலர் சக்தி சுபாஷினி தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாவட்ட மகளிர் அதிகார மைய ஒருங்கிணைப்பாளர் ராகவி, பாலின வல்லுனர் ஷெர்லி மார்க்ரேட், நிதி கல்வியறிவு வல்லுனர் வைரமணி, சமூகநல விரிவாக்க அலுவலர் சுஜாதா மற்றும் பலர் பங்கேற்றனர்.