ஓசூர் - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் வாகனங்கள் முந்துவதை தவிர்க்க தடுப்பு
ஓசூர்:ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், குறிப்பிட்ட இடங்களில் அதிகளவு விபத்துகள் நடப்பதால், அப்பகுதியில், தொப்பூரை போல் வாகனங்கள் முந்தி செல்வதை தடுக்க 'பிளாஸ்டிக் போஸ்ட்' எனப்படும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு, 52 கி.மீ., துார தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில், பேரண்டப்பள்ளி, சூளகிரி, மேலுமலை, குருபரப்பள்ளி உட்பட பல்வேறு இடங்களில் சாலை மேடு, பள்ளம் நிறைந்ததாக உள்ளது. இந்த சாலையில், வாகனங்கள் அதிவேகமாக செல்லும்போது, முன்னால் செல்லும் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. அதனால் உயிரிழப்பு, போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த, ஜூலை 20 குருபரப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே அடுத்தடுத்து, 12 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், தந்தை, மகன் உட்பட மூவர் உயிரிழந்தனர். சம்பவ இடத்தை பார்வையிட்ட கலெக்டர் தினேஷ்குமார், ''தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் பகுதியில், அதை தடுக்கும் விதமாக தொப்பூர் போன்று கனரக வாகனங்கள், தனி லைனில் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கூறினார். ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், பேரண்டப்பள்ளி வனப்பகுதியில், இறக்கமான சாலையில், 1 கி.மீ., துாரத்திற்கு, ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்தி செல்லாத வகையிலும், கனரக வாகனங்கள் தனி லைனில் செல்லவும், தொப்பூர் மலைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ளது போல், சாலையில் குறிப்பிட்ட இடைவெளியில் பிளாஸ்டிக் போஸ்ட் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒரு பாதையில் செல்லும் வாகனங்கள், மற்றொரு பாதைக்கு செல்ல முடியாது. அதன் மூலம் விபத்தை குறைக்க முடியும் என, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.