மேலும் செய்திகள்
துரியோதனன் படுகளம் கோலாகலம்
21-Apr-2025
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பன ஹள்ளி ஒன்றியம், குப்பச்சிப்பாறை கிராமத்தில், தர்மராஜா சமேத பாஞ்சாலி அம்மன் கோவிலில், நேற்று துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கடந்த மாதம், 21 முதல், கிருஷ்ணன் பிறப்பு, அம்பாலி திருமணம், பாண்டவர் பிறப்பு, வில் வளைத்தல், சுபத்திரை திருமணம், துகில் உரிதல், அர்ச்சுணன் தபசு, குறவஞ்சி நாடகம், கண்ணன் துாது, அறவான் களபலி, அபிமன்யூ போர், கர்ண மோட்சம் ஆகிய இதிகாச நாடகங்கள் நடைபெற்று வந்தன. நேற்று முன்தினம் இரவு துரியோதனன் படுகளம் குறித்த நாடகம் நடந்தது. நேற்று காலை, கோவில் முன், 30 அடி நீள துரியோதனன் உருவ பொம்மையை மண்ணால் செய்து, அதில் பீமனும், அர்ச்சுணனும் போரிடும் காட்சிகள் நடத்தி, இறுதியில் அர்ச்சுணன் போர் வாளால் துரியோதனனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து திரவுபதி அம்மனை துரியோதனன் உடல் மீது வைத்து, சபதம் நிறைவேறும் வகையில், திரவுபதி கூந்தல் முடிக்கும் நிகழ்வும் நடந்தன. இதில் திருநங்கையின் கையில், ஆண்களும், பெண்களும் துடைப்பத்தால் அடிவாங்கி, தங்களின் வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர். இதில், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.
21-Apr-2025