கே.ஈச்சம்பாடி நீரேற்று திட்டத்தை செயல்படுத்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
அரூர், 'கிடப்பில் போடப்பட்டுள்ள கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்று திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.தர்மபுரி மாவட்டம், அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., சின்னுசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் திருமலை, ராஜமாணிக்கம், ராஜ்குமார், உதயகுமார், சுரேஷ் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பேசியதாவது:பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் செயல்படும் தனியார் மரவள்ளி கிழங்கு அரவை ஆலை, பீணியாற்றில் தண்ணீரை திருடுவதுடன், கரையை ஆக்கிரமிப்பு செய்து, அதன் கழிவு நீரை ஆற்றில் விடுகின்றனர். இதனால் ஐந்து பஞ்சாயத்துகளில், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. பீணியாற்றில் தண்ணீர் திருட்டு நடந்த போதிலும் பொதுப்பணித்துறையினர் அபராதம் விதிக்கவில்லை. இதற்காக கடந்த மாதம் உண்ணாவிரத போராட்டம் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. அந்த மனுக்கள் எங்கு போகிறது என தெரியவில்லை. அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அச்சல்வாடி கதவனேரியில் கோடி நீர் வெளியேறும் இடத்தில் ஷட்டர் பொருத்த வேண்டும். வேளாண்மைத்துறை சார்பில், மானிய விலையில் கடந்தாண்டு கிலோ, 50 ரூபாய்க்கு வழங்கப்பட்ட தக்கை பூண்டு நடப்பாண்டு, 80 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. எனவே கடந்தாண்டு வழங்கப்பட்ட விலைக்கே கொடுக்க வேண்டும்.மொரப்பூர், கடத்துார் பகுதியில் உள்ள, 66 ஏரிகளை நிரப்ப, 410 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்ட கே.ஈச்சம்பாடி தடுப்பணை நீரேற்று திட்டம் கிடப்பில் உள்ளது. அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு பேசினர்.இதற்கு பதிலளித்த ஆர்.டி.ஓ., சின்னுசாமி, ''விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.