சிறுமி கர்ப்பம்; தொழிலாளி போக்சோவில் கைது
தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியில், 13 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்டதாக, சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில், கெலமங்கலம் வட்டார சமூக நலத்துறை ஊர்நல அலுவலர் சுமதி விசாரணை நடத்தினார். இதில், ராயக்கோட்டை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சென்ராயன், 22, என்பவருக்கும், 13 வயது சிறுமிக்கும் திருமணம் நடந்ததும், சிறுமி தற்போது, 6 மாதம் கர்ப்பமாக இருப்பதும் தெரிந்தது.உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். ஊர் நல அலுவலர் சுமதி, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகார்படி, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்த போலீசார், சென்ராயனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.