| ADDED : ஜன 14, 2024 12:19 PM
ஓசூர்: ஓசூரில், நேற்று காலை கடுமையான மூடுபனி நிலவியது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர்.கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் நகரம், மலையின் சமதள பரப்பில் அமைந்துள்ளதால், சீதோஷ்ண நிலையில் பெரிய அளவில் மாற்றம் உள்ளது. ஆண்டுதோறும், நவ., முதல் ஜனவரி இறுதி வரை கடும் குளிர் நிலவும். கடந்தாண்டை போலவே தற்போது பனியின் தாக்கம் இரவில் அதிகமாக உணரப்படுகிறது. பொதுவாக இரவில், 16 டிகிரிக்கு மேல் வெப்பம் இருந்தால், குளிரின் தாக்கம் பெரியளவில் தெரியாது. அதற்கு கீழ் சென்றால், குளிரின் தாக்கம் அதிகரிக்கும். கடந்த டிச., மாதம் முதல் ஓசூரில் கடும் குளிர் காணப்படுகிறது. நேற்று காலை, 8:30 மணிக்கு மேலாகியும், வழக்கத்தை விட அதிகமான மூடுபனி காணப்பட்டது. இரவில், 15 டிகிரிக்கும் கீழ் வெப்பநிலை சென்றதால், நேற்று காலை, சாலைகளில் முன்னால் சென்ற வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டத்தால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. மூடுபனியுடன், காற்றில் ஈரப்பதம் அதிகமானதால், காலையில் பணிக்கு சென்ற தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். தேன் கனிக்கோட்டை, கெலமங்கலம், சூளகிரியிலும், பனிப்பொழிவு அதிகமாக இருந்தது.