சுடுகாட்டிற்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகள்
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், தாமோதரஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட, மொள்ளம்பட்டி கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமத்திற்கு ஐந்தரை ஏக்கர் பரப்பளவில், சுடுகாட்டிற்கு சொந்தமான நிலம் உள்ளது. இதில் ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்து, குடியிருப்பு வீடுகள் கட்டி வசிக்கின்றனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமாருக்கு சென்ற தகவலின்படி, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அங்கு சென்ற போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா, காவேரிப்பட்டணம் பி.டி.ஓ., பாப்பிபிரான்சி மற்றும் பாரூர் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் சுடுகாட்டிற்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை, பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்ற முயன்றனர். இதற்கு அப்பகுதி வீட்டில் வசிக்கும், செல்வம், 62, மற்றும் அவரின் மனைவி, 3 மகன்கள், அவர்களின் உறவினர்கள், 50 வருடங்களுக்கு மேல் இந்த இடத்தில் குடியிருந்து வருவதாகவும், தங்களுக்கு மாற்றிடமில்லை எனவும் எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் வீட்டிலிருந்த உணவு பொருட்கள், பாத்திரங்கள், துணிகளை வீட்டின் முன் எடுத்து வீசி, ஆக்ரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தாசில்தார், பி.டி.ஓ., இன்ஸ்பெக்டர் ஆகியோரின், சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். வீட்டை அகற்ற ஒரு வார கால அவகாசத்தை, செல்வம் குடும்பத்தினர் கேட்ட நிலையில், வீட்டை விட்டு, விட்டு மற்ற பகுதி ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.