தனியார் ஊழியரிடம் ரூ.5.70 லட்சம் மோசடி
கிருஷ்ணகிரி, ஓசூரில், தனியார் ஊழியரிடம் ஆன்லைன் மூலம், 5.70 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கோகுல் நகர் நந்தவனம் லே அவுட்டை சேர்ந்தவர் ஜக்கா நாராயணா, 52. தனியார் நிறுவன ஊழியர். இவரது மொபைல் எண், 'வாட்ஸாப்'பில் வந்த விளம்பரத்தில், முதலீட்டிற்கு அதிக லாபம் தருவதாக இருந்தது. அதனால் அந்த ஆன்லைன் 'லிங்க்'கில் உள்ளே சென்ற அவர், அதில், சிறிய அளவில் முதலீடுகளை செய்தார்.அதற்கு ஓரளவிற்கு கூடுதல் பணம் வந்தது. தொடர்ந்து அவர், கடந்த ஜூன், 4ம் தேதி வரை, பல தவணைகளில், அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு, 5.70 லட்சம் ரூபாயை அனுப்பினார். ஆனால் அவருக்கு லாபமோ, முதலீடு செய்த பணமோ திரும்ப கிடைக்கவில்லை. ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், நேற்று முன்தினம் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.