உரங்கள் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
கிருஷ்ணகிரி, உரங்கள் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் (பொ) காளிமுத்து எச்சரித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: விற்பனை முனைய கருவி மூலம் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். உர உரிமம் இல்லாமலோ, உர உரிமம் புதுப்பிக்காமலோ, அதிக விலைக்கு உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு உரங்கள் விற்பதை கண்டறிந்தால், கடையின் உர உரிமம் ரத்து செய்யப்படும். யூரியா உரங்கள் கொடுக்கும்போது விவசாயிகள் முகவரியுடன் ரசீது கொடுக்க வேண்டும். அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே உரங்களை வைத்திருக்க வேண்டும். விவசாயிகள் யூரியா உரத்தை அதிகபட்சமாக ஏக்கருக்கு, 2 மூட்டைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். உரங்களை பக்கத்து மாநிலங்களுக்கு விற்பனை செய்தாலோ, கடத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வகையான பயிர்களுக்கு கிடைக்கக்கூடிய உயிர் உரங்கள், இலைவழி தெளிப்பு உரங்கள், நுண்ணுாட்டச்சத்து உரங்கள் பயன்படுத்துவதால் பயிருக்கு வழங்கப்படும் உர அளவை குறைத்து, மண் வளத்தை பாதுகாத்து, உரச்செலவை குறைத்து அதிக மகசூல் பெறலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.