ஓசூர் மலைக்கோவிலுக்கு 4 வாகனம் காணிக்கையாக வழங்கிய டி.வி.எஸ்.,
ஓசூர் :ஓசூர் மலை மீது மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, டி.வி.எஸ்., நிறுவனம், புதிய மாடல் வாகனங்களை தயார் செய்து சந்தையில் விற்பனை செய்வதற்கு முன், இக்கோவிலுக்கு காணிக்கையாக வழங்குவது வழக்கம். அதன் பின் வாகனத்தை தங்கள் நிறுவனத்திற்கு கொண்டு சென்று, அந்த வாகன மதிப்பை, கோவில் அன்னதானத்திற்கு பயன்படுத்தும் வகையில், நிரந்தர வைப்பு தொகையாக வங்கியில் டிபாசிட் செய்து விடுவார்கள். அதன்படி, டி.வி.எஸ்., நிறுவனம், தாங்கள் தயார் செய்த, 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பயணிகளை ஏற்றி செல்லும் மின்சாரத்தில் இயங்கும், 2 ஆட்டோ மற்றும் 1.35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பெட்ரோலில் இயங்கும் பைக் மற்றும் 1.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்சாரத்தில் இயங்கும் பைக் ஆகியவற்றை, கோவில் நிர்வாகத்திடம் நேற்று காணிக்கையாக வழங்கியது.கோவில் செயல் அலுவலர் சின்னசாமி, ஆய்வாளர் சக்தி, டி.வி.எஸ்., நிறுவன சி.இ.ஓ., ராதாகிருஷ்ணன், கோவில் குருக்கள் வாச்சீஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.